1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 20 ஜூலை 2018 (11:03 IST)

விஜய் சேதுபதிக்கு பொது அறிவு இல்லை - பசுமை தாயகம் பதிலடி

திரைப்படங்களில் நடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சிகள் தொடர்பான விஜய் சேதுபதியின் கருத்துக்கு பசுமை தாயகம் பதிலடி கொடுத்துள்ளது.

 
மெர்சல் பட போஸ்டரில் நடிகர் விஜய்  புகைபிடிப்பது போல காட்சிகள் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு பாமக அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். விஜய்க்கு சுகாதாரத்துறை நோட்டீஸும் அனுப்பியது. அதைத் தொடர்ந்து புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் நீக்கப்பட்டன.
 
ஜூங்கா பட விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி “சிகரெட் பிடிப்பது தொடர்பாக நடிகர்களை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? அதற்கு பதிலாக சிகரெட் கம்பெனிக்கு எதிராக குரல் கொடுங்கள்” என தெரிவித்தார்.
 
இந்நிலையில், விஜய் சேதுபதியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பசுமை தாயாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “தமிழ் சினிமாவில் நடிகர்கள் புகை பிடிப்பதை மட்டுமில்லாமல், புகையிலை கம்பெனிகளுக்கும் எதிராக குரல் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ். பொது இடங்களில் புகைபிடிக்க தடை, எச்சரிக்கை படம், குட்கா-பான் மசாலாவுக்கு முழு தடை, திரைப்படங்களில் காட்டப்படும் எச்சரிக்கைகள் என அனைத்தும் அன்புமணியின் முயற்சியால் விளைந்த நன்மைகள்.
 
அவரின் நடவடிக்கையால் இந்தியாவில் புகைபிடிப்போரின் அளவு 9 சதவீதம் குறைந்துள்ளது. இது மிகப்பெரும் சாதனையாகும். புகை பிடிப்பது குறித்து டாக்டர் அன்புமணி  குரல் கொடுக்கவில்லை என, புகார் சொல்லும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பொது அறிவு இல்லை எனத் தெரிகிறது.
 
மாபெரும் சாதனைகளை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. கொச்சைப்படுத்தாமல் இருக்க நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.