1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 7 டிசம்பர் 2018 (13:53 IST)

நாலுப் படம் எடுத்துவிட்டு பேசுகிறேனா ? பா ரஞ்சித் காட்டம்

நேற்று நடந்த அம்பேத்கர் நினைவு தின விழாவில் இயக்குனர் பா ரஞ்சித் தனித்தொகுதி எம்.எல்.ஏ க்களை காட்டமாக விளாசியுள்ளார்.

சென்னையில் நேற்று புரட்சியாளர் அம்பேத்கர் நினைவுதினம் கொண்டாடப்பட்டது. அதில் பரியேறும் பெருமாள் படத்திற்குப் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் கலந்து கொண்ட ப.பெ. படத்தின் தயாரிப்பாளர் பா ரஞ்சித் தனித்தொகுதியில் நின்று வெற்றி பெற்ற பட்டியலின வேட்பாளர்களைக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
பா ரஞ்சித் பேசியதாவது:-

’நான் நான்குப் படங்களை இயக்கிவிட்டு ஓவராகப் பேசுவதாக சிலர் கூறி வருகின்றனர். நான் படமே எடுக்காவிட்டாலும் இப்படித்தான் பேசுவேன். ஏனென்றால் என்னைத் துரத்தும் ஜாதி என் பிறப்போடு சம்மந்தபட்டிருக்கிறது. நான் சுடுகாட்டில் சென்று தூங்கும் வரை அது என்னைத் துரத்திக்கொண்டே வரும். அதனால் இந்த உடலில் உயிர் உள்ளவரை நான் சாதிக்கு எதிராகப் பேசுவேன்’.

’சமீப காலமாக நடைபெற்ற பட்டியலின மக்களின் படுகொலைகளைப் பற்றி இங்கு தலித் கட்சிகளும், கம்யூனிசத் தோழர்களும் மட்டுமே பேசி வருகிறார்கள். ஆனால், தனித்தொகுதிகளில் பட்டியலின மக்களால் வாக்குகள் பெற்று இன்று எம்.எல்.ஏ.க்களாக, எம்.பி.க்களாக இருப்பவர்கள் சின்ன கண்டன அறிக்கை கூட விடுவதில்லை.  எந்த மக்கள் ஓட்டுகளை வாங்கி அதிகாரத்துக்கு வந்தார்களோ, அந்த மக்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. அப்படி பேசாமல் அந்த வேட்பாளர்களை சம்மந்தப்பட்ட கட்சிகள் தடுக்கின்றனவா ?.நம்மைக் கண்டுகொள்ளாத இவர்களுக்கு, நாம் ஏன் நமது வாக்குகளைச் செலுத்த வேண்டும்? இங்கு தலித் மக்களுக்காக போராடும் பல தலித் அமைப்புகள் உள்ளன. அவர்களுக்கு நம் வாக்குகளை போடுவோம். தனித்தொகுதிகளில் நம் வாக்கை செலுத்தாமல் இருப்போம். பொதுத் தொகுதிகளில் மட்டும் நம் வாக்கை செலுத்துவோம்.’ என ஆவேசமாகக் கூறியுள்ளார்.