வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: சனி, 17 நவம்பர் 2018 (11:22 IST)

ஒசூரில் இளம் தம்பதியர் ஆணவப்படுகொலை: பா.ரஞ்சித் ஆவேச டுவிட்

ஒசூர் அருகே இளம் தம்பதியினர் சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்டதை  கண்டித்து இயக்குனர் பா.ரஞ்சித் ஆவேசமாக டுவிட்டர் கருத்து பதிவிட்டுள்ளார்.
 
ஓசூர் அருகே பாகலூரைச் சேர்ந்தவர்கள் ஸ்வாதி, நந்தீஷ்.  இருவரும் வீட்டின் சம்மதம் கிடைக்காததால் வெளியேறி ஆகஸ்ட் 15ம் தேதி (சுதந்திர தினம்!!) சூலகிரியில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டனர், பிறகு தங்கள் திருமணத்தை அதிகாரபூர்வமாக செப்டம்பரில் பதிவு செய்துள்ளனர்.நந்தீஷ்-ஸ்வாதி ஜோடி பிறகு ஷூலக்கொண்டப் பள்ளி கிராமத்திலிருந்து வெளியேறி ஓசூரில் இல்லறம் நடத்தி வந்தனர். இங்கு நந்தீஷ் மரக்கடையில் வேலை செய்து வந்தார்.இந்நிலையில் நேற்று  கர்நாடகா சிவனசமுத்ரா பகுதியில் காவேரி அருகே இருவரது உடலும் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தம்பதிகள் இருவரும் ஒசூரில் இருந்து கடத்தி கொல்லப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
 
இந்த சாதி ஆணவப்படுகொலையை கண்டித்து இயக்குனர் பா.ரஞ்சித் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இதோ நிகழ்ந்தேறிவிட்டது இன்னுமொரு கொடுந்துயர சாதி ஆணவ படுகொலை... வாய் பேச முடியாத காளைகள் எங்கள் குடும்பத்தில் ஒன்று என போராடிய தமிழ் போராளி தோழமைகளே!!! வாய் பேச முடிந்த #நந்தீஸ்-சுவாதி இவர்களை கொன்ற சாதி திமிருக்கு எதிராக திரள்வோம்!! வாருங்கள் நீதி கேட்போம்!!   
 
 
தயவு செய்து தமிழக ஊடகங்களிடம் மன்றாடி கேட்டு கொள்கிறோம்...துடைத்து அப்புறப்படுத்த வேண்டிய சாதி கேவலத்துக்கு எதிராக முழுவீச்சில் வினையாற்றுவோம்.
 
 
இன்னும் எத்தனை உயிர்களை ஆணவ சாதி தின்னப்போகிறது? இந்த கொடுந்துயருக்கு இப்போதே முடிவு கட்டுவோம்!!! #சாதிக்கு_முடிவு_கட்டுவோம்  திரையுலக மற்றும் முற்போக்கு எண்ணம் கொண்ட தோழமைகளே!!விழித்துகொள்வோம்!இன்னும் இன்னும் நம் குடும்பங்கள், நம் தெருக்கள், நம் ஊர்கள், நகரங்கள், நம் நாடு என, எல்லா இடங்களிலும் நீக்கமற இருக்கும் இந்த நூற்றாண்டின் கொடூரம் இழிவு, இந்த சாதி திமிருக்கு எதிராக திரள்வோம்!!!" இவ்வாறு ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் சூளுரைத்துள்ளார்.