1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 2 அக்டோபர் 2019 (10:23 IST)

சிறையில் இருந்துக்கொண்டு பிரச்சாரமா? அழகிரியின் கண்மூடித்தனமான முடிவு!

இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தின் பெயரை சேர்த்துள்ளார் கே.எஸ்.அழகிரி. 
 
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இடைத்தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக மற்றும்  நாம் தமிழர் கட்சிகள் தயாராகி வருகின்றன.  
 
இந்நிலையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கும்படி கூட்டணி கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டு முடித்துவிட்டனர். 
இதனையடுத்து இடைத்தேர்தலுக்கு தங்களது கட்சியின் சார்பில் பிரசாரம் மேற்கொள்ள உள்ள 40 நட்சத்திரப் பேச்சாளர்களின் பட்டியலை அரசியல் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துள்ளது. 
 
அந்த வகையில், திமுக நட்சத்திரப் பேச்சாளர்களின் பட்டியலில் மு.க.ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளார். 
அதேபோல் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோரின் பெயர்கள் உள்ளன. இதேபோல் காங்கிரஸ் பட்டியலில், கே.எஸ்.அழகிரி, முகுல் வாஸ்னிக், கே.ஆர்.ராமசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ப.சிதம்பரம் ஆகியோரின் பெயரும் உள்ளது. 
 
ப.சிதம்பரத்தின் பெயர் இதில் இணைக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ப.சிதம்பரம் சிறையில் உள்ள நிலையில் அவர் எப்படி நட்சத்திர பேச்சாளராக பங்கேற்பார்? கே.எஸ் அழகிரியின் முடிவால் கட்சியினரே குழப்பத்தில் உள்ளனராம்.