1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 25 ஜூலை 2018 (12:14 IST)

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை துவக்கம் ; கைவிட்ட எடப்பாடி ; ஓ.பி.எஸ் கதி என்ன?

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீது திமுக தொடர்ந்த சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருப்பது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
வருமானத்திற்கு அதிகமான சொத்துகள் சேர்த்துள்ளதாக ஓபிஎஸ் மீது கடந்த மார்ச் 10ம் தேதி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், சட்டசபை தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிடும் போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள சொத்துக்களின் பட்டியலுக்கும், வருமான வரித்துறையில் செலுத்தியுள்ள சொத்துக்குகளின் விவரங்களுக்கும் நிறைய முரண்பாடுகள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். 
 
அதுபோக, ஓ.பி.எஸ்-ஸின் மனைவி, சகோதரர், மகன்கள் மற்றும் மகளின் பெயரில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும், சேகர் ரெட்டியின் டைரியில் ஓ.பிஎஸ்-க்கு ரூ. 4 கோடி கொடுக்கப்பட்டது என எழுதி வைக்கப்பட்டது குறித்தும், பினாமி பெயரில் பல கோடி சொத்துக்களை ஓபிஎஸ் குடும்பம் சேர்த்துள்ளது குறித்தும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். 
 
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 3 மாதங்களாகியும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இந்த வழக்கை ஏன் சிபிஐ-க்கு மாற்றக்கூடாது என கேள்வி எழுப்பியிருந்தது. இது ஓ.பி.எஸ் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிகிறது. எனவே, இந்த வழக்கில் சிபிஐ விசாரணை அமைக்காமல் தன்னை காப்பாற்றுமாறு கோரிக்கை வைக்கவே ஓ.பி.எஸ் நேற்று டெல்லி சென்றதாகவும், இதுபற்றி முன்பே அறிந்த பாஜக தலைமை, ஓ.பி.எஸ்-ஐ சந்திக்காமல் தவிர்க்குமாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.அதனால்தான், 45 நிமிடம் வாசலில் காத்திருந்தும் அவரை சந்திக்காமல் திருப்பி அனுப்பினார் நிர்மலா சீதாராமன் என்கிறது டெல்லி வட்டாரம்.

 
இது ஓ.பி.எஸ் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், சிரித்த முகத்துடனேயே ‘ எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ என பேட்டி கொடுத்து விட்டு நேற்று மாலை சென்னை திரும்பினார் ஓ.பி.எஸ். 
 
இந்நிலையில், இன்று அவருக்கு அடுத்த அதிர்ச்சியை தமிழக அரசு கொடுத்துள்ளது. அதாவது, ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து முதற்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்த விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், புகார் தொடர்பான ஆவணங்கலை லஞ்ச ஒழிப்புதுறைக்கு வழங்க மனுதாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
அடிமேல் அடியாக நேற்று டெல்லி சென்று வெறுங்கையோடு திரும்பி வந்த ஓ.பி.எஸ்-க்கு தற்போது சொத்துக்குவிப்பு வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு வழக்கு சென்றுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
 
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பி.எஸ்-க்கும் இடையே ஏற்கனவே கருத்துவேறுபாடு இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் துணை முதல்வருக்கு எதிராக தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.