1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Nandhini sister Niranjana arrested

நந்தினியை அடுத்து நந்தினியின் தங்கையும் கைது

நந்தினி
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் வழக்கறிஞர் நந்தினி மீதும் அவரது தந்தை ஆனந்தன் மீதும் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்ட நிலையில் சமீபத்தில் இந்த வழக்கின் விசாரணை நடந்தபோது டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்பது குற்றமில்லையா என நீதிபதியிடம் வாதாடினார். இதனால் அவர் மீதும், அவரது தந்தை மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
ஜூலை 5ம் தேதி நந்தினிக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்த நிலையில் திருமண தினத்தன்று நந்தினி சிறையில் இருந்ததால் அவரது திருமணம் தடைபட்டது. இதனால் அவர்கள் குடும்பத்தினர் உட்பட அனைவரும் கவலையில் உள்ளனர்.
 
இந்த நிலையில் நந்தினியின் தங்கையும்  சட்டக்கல்லூரி மாணவியுமான நிரஞ்சனா இன்று தனது சகோதரி நந்தினியை விடுவிக்க வலியுறுத்தி மதுரை சட்டக்கல்லூரி முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் நந்தினியின் தங்கை நிரஞ்சனாவை கைது செய்தனர். மதுவுக்கு எதிராக போராடிய நந்தினியின் குடும்பமே தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
ஊழியரின் கணவர் கொலை வழக்கு - சரவணபவன் ராஜகோபால் இன்று சரண்டர் ஆவாரா ?