வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 9 அக்டோபர் 2018 (11:29 IST)

நக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்கு –வைகோ தர்ணா போராட்டம்.

இன்று அதிகாலை சென்னை விமானநிலையத்தில் வைத்து நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டதை அடுத்து தற்போது நக்கீரன் இணையதள ஆசிரியர் வசந்த் பால்கிருஷ்ணனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை சென்னையிலிருந்து புனே செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நக்கீரன் கோபாலை விமான நிலைய காவல் உதவி ஆணையர் கைது செய்துள்ளார். விமான நிலையத்தில் வைத்து ஒரு மணிநேரம் வரை விசாரித்து பின்பு அடையாறு சரக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
.
கோபால் தற்போது சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். அழைத்து செல்லப்பட்டுள்ளார். மாணவிகளிடம் பாலியல் ரீதியாகப் பேசிய வழக்கில் சிக்கி சிறையிலுள்ள பேராசிரியை நிர்மலா தேவி குறித்து நக்கீரன் பத்திரிக்கை தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்ததாகவும் அதில் ஆளுநருக்கும் சம்மந்தம் இருப்பது போல செய்திகள் வெளியிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்தக் கட்டுரைகள் ஆளுநர் மீது அவதூறு பரப்பும் வகையிலும் ஆளுநர் பணியில் தலையிடுவதாகவும் உள்ளதால் ஆளுநர் தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்ப்ட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நக்கீரன் கோபாலின் கைதையடுத்து தற்போது நக்கீரன் பத்திரிக்கையின் இணையதள ஆசிரியர் வசந்த பாலகிருஷ்ணன் கைது செய்யப்ப்ட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நக்கீரன் பத்திரிக்கையின் முதன்மை ஆசிரியர் தாமோதரன் பிரகாஷ், பொறுப்பு ஆசிரியர் கோ.வி.லெனின், தலைமை நிருபர்     இளையசெல்வத்தையும் தேடி வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நக்கீரன் கோபால் மீது சட்டப்பிரிவு 124 ஏ-ன் கீழ் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கும் நக்கீரன் கோபாலை பார்க்க சென்ற மதிமுக பொதுச்சயலாளர் வைகோ வுக்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. அதனையடுத்து அவர் அந்த இடத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது ‘காவல்துறையையும் நீதித்துறையையும் அவமதித்துப் பேசிய ஹெச் ராஜாவுக்கு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து தரப்ப்டுகிறது. ஆனால் ஊடகவியலளரைக் கைது செய்யுமா இந்த அரசு?’ எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.