வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 நவம்பர் 2020 (13:40 IST)

பொறுமையா இருன்னு சொன்னேனே கேட்டியா? – மகனையே கொன்ற தாய் கண்ணீர்!

திருப்பூர் அருகே தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என சண்டை போட்ட மகனை தாயே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்து உள்ள ஊத்துப்பாளையத்தை சேர்ந்தவர் தமிழரசி. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட தனது மகன்கள் இருவரோடு வாழ்ந்து வந்துள்ளார். முதல் மகன் சதீஷூக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ள நிலையில் அனைவரும் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். இரண்டாவது மகன் சிதம்பரம் ஜேசிபி ஆப்பரேட்டராக பணியாற்றி வரும் நிலையில் அவருக்கு வெகுநாளாக பெண் தேடி வந்துள்ளனர்.

ஆனால் சிதம்பரத்திற்கு மது பழக்கம் இருந்ததால் பெண் வரன் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி சிதம்பரம் தனது தாயிடம் திருமணம் குறித்து சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ் தனது மனைவி, குழந்தைகளுடன் வெளியூர் சென்றிருந்த சமயம், மது அருந்தி விட்டு தன் தாயிடம் வந்து தகராறு செய்துள்ளார் சிதம்பரம்.

இதனால் ஆத்திரமடைந்த தாய் உலக்கையால் சிதம்பரத்தை தாக்க சம்பவ இடத்திலேயே சிதம்பரம் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு சிதம்பரத்தின் தாயாரே போன் செய்து தன் மகனை கொலை செய்து விட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சிதம்பரத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, தாய் தமிழரசியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.