வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 நவம்பர் 2020 (10:54 IST)

தேஜஸ்விக்கு நடந்தது ஸ்டாலினுக்கு நடக்க கூடாது! – காங். கூட்டணி குறித்து திமுக யோசனை?

பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் காங்கிரஸுடனான கூட்டணி குறித்து திமுக யோசித்து வருவதாக பேசிக்கொள்ளப்படுகிறது.

நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 110 இடங்களில் வெற்றி பெற்று பின் தங்கியுள்ள நிலையில் பாஜக கூட்டணி 125 இடங்களை பிடித்து பெரும்பான்மையை தாண்டியுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் தேஜஸ்வி யாதவ்வின் ராஷ்டிரிய ஜனதா தளம் 114 இடங்களில் போட்டியிட்டது. தனது கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு 70 இடமும், மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிக்கு 19 தொகுதிகளும் வழங்கப்பட்டன.

இந்நிலையில் தேர்தல் முடிவுகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 114க்கு 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி 19க்கு 12 இடங்களில் வென்றுள்ளது. ஆனால் 70 இடங்களை கேட்டு வாங்கி போட்டியிட்ட காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கூட்டணியிலேயே மிகவும் குறைவான வெற்றி இதுதான். இதனால் 70 தொகுதிகளை காங்கிரஸுக்கு தேஜஸ்வி அளித்திருக்காமல் இருந்திருந்தால் அவர் வெற்றி பெற்றிருப்பார் என பேசிக் கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் பீகார் தேர்தலில் காங்கிரஸின் தோல்வியை தொடர்ந்து தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுடனான கூட்டணி குறித்து திமுக யோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது. திமுக இந்த தேர்தலில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அதிக ரிஸ்க் எடுக்காமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒதுக்கியதை விட குறைவான தொகுதிகளையே ஒதுக்க வாய்ப்புள்ளதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.