புதன், 18 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 14 செப்டம்பர் 2024 (15:44 IST)

அரசியல் கட்சி வழங்கிய பிரியாணி சாப்பிட்ட சிறு குழந்தைகள் பள்ளி மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் மருத்துவ மனையில் அனுமதி!

திமுக சார்பில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி தாலுகா வில்லூரில் நேற்று பொது உறுப்பினர் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
 
இதையடுத்து அனைவருக்கும் நேற்று முன்தினமே ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் சிக்கன் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது நேற்று மதியம் கூட்டம் முடிந்தவுடன் அனைவருக்கும் சில்வர் தட்டு மற்றும் பிளாஸ்டிக் டப்பாவில் வைக்கப்பட்ட சிக்கன் பிரியாணி பார்சல் வழங்கப்பட்டுள்ளது. பிரியாணியை சாப்பிட்ட சிலர் கூடுதலாக சிக்கன் பிரியாணி  பார்சல் வாங்கிக் கொண்டு வீட்டில் வைத்து மாலையில் பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த தங்களது பிள்ளைகளுக்கும் பிரியாணி கொடுத்துள்ளனர் இந்த நிலையில் பிரியாணி சாப்பிட்ட நூறுக்கும் மேற்பட்டோருநேற்று இரவு எட்டு மணிக்கு மேல் திடீரென வாந்தி மயக்கத்தால் அவதிப்பட்டனர். இதில் மூன்று வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட 40க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அனைவரும் வில்லூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சென்றனர் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால். அவர்கள் 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கள்ளிக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 
சிறு குழந்தைகள் பத்துக்கும் மேற்பட்டோர் உட்பட 29 பேர் விருதுநகர் மருத்துவமனையிலும் 30 பேர் கள்ளிக்குடி மருத்துவமனையிலும் மீதமுள்ள 82பேர் வில்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிகிச்சை பெற்று வருகின்றனர் . பொதுமக்களுக்காக தயார் செய்யப்பட்ட பிரியாணி கெட்டுப் போய் இருந்ததாக மேலும் இவர்கள் கொடுப்பதற்கும் காலதாமதம் ஆனதால் உணவு விஷமாக மாறி உள்ளது அதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது வேறு ஏதும் பெரிய பாதிப்பு இல்லை என மருத்துவ வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது திமுக நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணியை சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தால் உள்ளூர் பகுதியில் பரபரப்பான சூழல் உருவாகியது.
 
இந்நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் ஏ எஸ் பி அன்சுல் நாகர் தலைமையிலான வில்லூர் போலீசார் மருத்துவ மனைகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.