1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (13:02 IST)

பத்திரிக்கையாளர்களை பழிவாங்கும் அமைச்சர்கள்?? – மு.க.ஸ்டாலின் கண்டனம்!

கோவையில் பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஆளும் அமைச்சர்களின் பழிவாங்கும் நடவடிக்கை உள்ளதாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் கொரோனா பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்களுக்கு போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தி தரவில்லை என திமுக எம்.எல்.ஏ குறிப்பிட்ட செய்தியை வெளியிட்ட இணைய இதழின் பத்திரிக்கையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். பிறகு அவர்களை விடுதலை செய்த போலீஸார் அந்த இணைய இதழின் பதிப்பாசிரியர் சாம் ராஜபாண்டியனை கைது செய்துள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ” கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரிவர நடைபெறவில்லை என திமுக MLA கார்த்திக் சுட்டிக்காட்டியதை வெளியிட்ட 'சிம்ப்ளிசிட்டி' இணைய இதழின் பதிப்பாளர் ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியனை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. அவரை விடுவித்து, ஊடகத்தினர் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்திடுக.” என கூறியுள்ளார்.

மேலும் “ஊடகத்தின் மீது ஏற்கனவே வன்மன் கொண்டு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செயல்பட்டார். தற்போது அமைச்சர் வேலுமணியும் அத்துமீறல் நடத்தி ஆட்டம் போடுகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.