வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 23 நவம்பர் 2020 (12:38 IST)

நிவார் புயல் எவ்வளவு வேகத்தில் வந்தாலும் பாத்துக்கலாம்... தங்கமணி பேச்சு!

நிவார் புயல் எவ்வளவு வேகத்தில் வந்தாலும் அதனை எதிர்கொள்ள மின்துறை தயாராக உள்ளதாக அமைச்சர் தங்கமணி பேச்சு. 
 
நிவார் புயல்  எவ்வளவு வேகத்தில் வந்தாலும் அதனை எதிர்கொள்ள மின்துறை தயாராக உள்ளதாகவும், புயல் கரையை கடக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்படும், இதனை மின்வெட்டு என நினைத்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
 
வடகிழக்கு பருவமழை மற்றும் நிவர் புயல் முன்னெச்செரிக்கை நடவடிக்கை தொடர்பாக சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்திலிருந்து மண்டல தலைமை பொறியாளர்களுடனும், அதிகாரிகளுடனும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். 
 
மேலும் மின்சார வாரிய தலைவர் பங்கஜ் குமார் பன்சால், இணை மேலாண்மை இயக்குனர் மற்றும் இயக்குனர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வருகின்ற 25ம் தேதி பிற்பகலில் நிவார் புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளாதால், இதனை எதிர்கொள்ள மின்துறை சார்பில் பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
 
புயல் கரையை கடக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்படும், இதனை மின்வெட்டு என நினைக்க வேண்டாம் என்ற அவர் 1.5 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், காரைக்கால் முதல் மாமல்லபுரம் வரை நான்கு மாவட்டங்களில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படுள்ளதாக கூறிய அவர், மரங்களை உடனடியாக அகற்றவும் தேவையான பணியாளர்கள் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.
 
கடலோர மாவட்டங்களில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், புயல் எவ்வளவு வேகத்தில் வந்தாலும் அதனை எதிர்கொள்ள மின்துறை தயாராக உள்ளது என்றார். கஜா புயலை விட அதிக பாதிப்பு இருக்காது, அப்படி இருந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக கூறினார்.
 
கடலூரில் புதை  வழித்தடத்தில் மின்சார தடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, வருங்காலங்களில் பணிகள் நிறைவுற்ற பிறகு பேரிடர் காலத்திலும் தடையின்றி மின்சாரம் வழங்க முடியும்  என்றார். மேலும் 24 மணி நேரமும் புகார்கள் தெரிவிக்க 1912 என்ற தொலைபேசி   எண்ணும் உள்ளதாக கூறினார்.