1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 டிசம்பர் 2017 (08:41 IST)

மீனவர்களை தேடும் பணியில் அறிவியல்பூர்வ உபகரணங்கள்: அமைச்சர் ஜெயகுமார்

சமீபத்தில் அடித்த ஓகி புயல் காரணமாக கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமல் போன நிலையில் அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் தீவிர முயற்சியால் இதுவரை பல மீனவர்கள் காப்பாற்றப்பட்டிருந்தாலும் இன்னும் 443 மீனவர்களை காணவில்லை என்பது ஒரு சோகமான விஷயம் தான். மேலும் இதுவரை 98 மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காணாமல் போன 35 நாட்டுப்படகு மீனவர்கள், 427 விசைப்படகு மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அவர்களை தேடும் பணி அறிவியல்பூர்வமான முறையில் நவீன உபகரணங்களைக் கொண்டு நடைபெற்று வருவதாகவும், கடைசி மீனவர் மீட்கப்படும்வரை தேடும் பணி தொய்வில்லாமல் தொடரும் என்று அமைச்சர் ஜெயகுமார் சற்றுமுன்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் காணாமல் போன மீனவர்களை போர்க்கால அடிப்படையில் மீட்டு தரவேண்டும் என்ற கோரிக்கையுடன் மீனவர்கள் மற்றும் மீனவர்களின் குடும்பங்கள் நடத்தி வரும் போராட்டம் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.