1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 21 ஜூன் 2021 (13:02 IST)

மைனர் சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞர் - போக்சோவில் கைது

கோவையில் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று  திருமணம் செய்த இளைஞரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

 
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் ராமசந்திரன்(22). கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் கோவையில் குடியேறியுள்ளனர். 
 
கடந்த மார்ச் மாதம் கோவை வந்த ராமசந்திரன் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் சிறுமி மதுரை மாவட்டம் பேரையூரில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
 
தகவலின் பேரில் செல்போன் டவர் உதவியுடன் பேரையூர் சென்று அங்கு இருந்து சிறுமியை மீட்ட போலீசார், ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த ராமசந்திரனை கைது செய்து கோவை அழைத்து வந்தனர். பின்னர் போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ராமச்சந்திரனை சிறையில் அடைத்தனர்.