திருச்செந்தூர் கோவிலில் உயரதிகாரிகள் முதல் கடைகோடி ஊழியர் வரை மோசடி.. ஒருத்தரையும் விடாதீங்க அமைச்சர் ரமேஷ்...!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் 100 ரூபாய் தரிசன டிக்கெட் விற்பனையில் சுமார் 25 லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றிருப்பது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலுவலக உதவியாளர் கட்டுக்கட்டாக பணத்தைப் பதுக்கி வைத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்த முறைகேட்டில் அவருக்கு மட்டுமே தொடர்பிருப்பதாக கூறப்படுவதை மக்கள் நம்ப மறுக்கின்றனர்.
தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் இந்த கோயிலில், டிக்கெட் வருவாய் குறைவதை நிர்வாகத்தினர் கவனிக்காமல் இருந்திருக்க முடியாது. டிக்கெட் எண்ணிக்கையை பதிவு செய்யும் லெட்ஜர், அதை சரிபார்க்கும் கண்காணிப்பாளர் மற்றும் இணை ஆணையர் என ஒவ்வொரு நிலையிலும் முறையான தணிக்கை இருந்திருக்கும்.
அப்படியிருக்கையில், இத்தனை மாதங்களாக இந்த தொடர் மோசடி நடைபெறுவதை யாரும் அறியவில்லை என்பது, ஒரு மெகா கூட்டணி அமைத்து இந்த ஊழல் நடத்தப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது. மேலதிகாரியின் அனுமதி இன்றி போலி டிக்கெட் விநியோகம் சாத்தியமில்லை என்பதால், உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரது துணையும் இதில் இருந்திருக்க அதிக வாய்ப்புள்ளது.
எனவே, இந்த முறைகேடு குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள், வெறும் மேலோட்டமான விசாரணையோடு நிறுத்தாமல், முழுமையான உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரையும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் சொத்துக்களையும், பக்தர்களின் காணிக்கையையும் பாதுகாப்பதில் அரசு உறுதி காட்ட வேண்டிய தருணம் இது.
Edited by Siva
