1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 30 ஜூலை 2023 (14:31 IST)

சர்ச்சைக்குரிய விளம்பர பதாகை: மனிதநேய மக்கள் கட்சி விளக்கம்..!

Jawahirullah
மணிப்பூர் விவகாரம் குறித்து போராட்டம் நடத்துவதாக அறிவித்த மனிதநேய மக்கள் கட்சியை திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் சர்ச்சைக்குரிய ஒரு விளம்பர பதாகை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 
 
இரு பக்கம் இந்து கடவுள் நடுவில் ஒரு பெண் நிர்வாணமாக இருப்பது போன்ற இருந்த அந்த விளம்பர பதாகை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவினர் குரல் கொடுத்து வந்தனர்.
 
இந்த நிலையில் மனித நேய மக்கள் கட்சி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் கூறி இருப்பதாவது:
 
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் மணிப்பூர் தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
 
இந்த ஆர்ப்பாட்டத்திற்காக ஒரு விரும்பதகாத விளம்பர தட்டி ஒன்று கட்சியை சேர்ந்த ஒரு சிலரால் வைக்கப்பட்டிருந்தது. இப்படியான ஒரு விளம்பர தட்டி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்ததும் மேல் நிலை நிர்வாகிகள் இத்தட்டியை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுத்தார்கள். தட்டி வைக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில்.  போராட்டம் தொடங்குவதற்கு முன்பே இந்த விரும்பதகாத தட்டி அப்புறப்படுத்தப்பட்டது. 
 
மனிதநேய மக்கள் கட்சி எந்த மதத்தினரின் உள்ளங்களையும் புண்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் கட்சியல்ல. இந்த விரும்பத்தகாத தட்டி வைப்பதற்கு காரணமானவர்கள் வன்மையாக கண்டிக்கப்பட்டார்கள். அவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விளம்பரத் தட்டியால் எவரது உணர்வு பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்.
 
Edited by Siva