வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (21:32 IST)

கொடூரன்‌ சீமானை தமிழர்கள்‌ ஒருபோதும்‌ மன்னிக்க மாட்டார்கள்: கே.எஸ்.அழகிரி அறிக்கை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது குறித்து ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சற்றுமுன் இதுகுறித்து காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைதேர்தல்‌ பிரச்சார கூட்டத்தில்‌ நாம்‌ தமிழர்‌ கட்சி ஒருங்கிணைப்பாளர்‌ சீமான்‌ முன்னாள்‌ பிரதமர்‌ ராஜீவ்‌ காந்தி அவர்களின்‌ படுகொலையை நியாயப்படுத்தியும்‌ அதை செய்தவர்களை வரலாறு நிச்சயம்‌ போற்றி பாராட்டும்‌ என்று பயங்கரவாத வன்முறை செயலை பகிரங்கமாக ஆதரித்து பேசியிருக்கிறார்‌. இந்த பேச்சின்‌ மூலம்‌ இந்தியாவில்‌ தடை செய்யபட்ட பயங்கரவாத இயக்கமான விடுதலை புலிகளின்‌ சட்டவிரோத நடவடிக்கைகளை ஆதரித்ததின்‌ மூலம்‌ தேசத்துரோக குற்றத்தை சீமான்‌ செய்திருக்கிறார்‌. இதன்‌ மூலம்‌ சமூக அமைதிக்கு கேடு விளைவித்திருக்கிறார்‌. தமிழர்‌ விரோதி சீமானின்‌ கீழ்த்தரமான அநாகரிக ஆணவ பேச்சை தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டி சார்பில்‌ வன்மையாக கண்டிக்கிறேன்‌.
 
இலங்கை தமிழர்களின்‌ நாற்பது ஆண்டுகால இன்னல்களை துடைக்க ஒப்பந்தம்‌ கண்டவர்‌ ராஜீவ்காந்தி. இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு, தமிழுக்கு ஆட்சிமொழி தகுதி, வடக்கு கிழக்கு மாகாணம்‌ இணைக்கபட்டு தமிழர்‌ தாயகபகுதி, வரதராஜ பெருமாள்‌ தலைமையில்‌ தமிழர்‌ ஆட்சி என பல்வேறு உரிமைகளை பெற்று தந்தவர்‌ ராஜீவ்காந்தி. இதற்காக இலங்கை ராணுவ வீரனால்‌ கொலைவெறி தாக்குதலுக்கு ஆளானவரும்‌ ராஜீவ்‌ காந்தி என்பதை எவரும்‌ மறந்திட இயலாது.
 
இலங்கை தமிழர்களை பாதுகாக்க இந்திய அமைதிகாக்கும்‌ படையை அனுப்பியவர்‌ ராஜிவ்காந்தி. இலங்கை தமிழர்களுக்கு பாதுக்காப்பு வழங்கிய இந்திய அமைதி காக்கும்‌ படையை சேர்ந்த 2000 இந்திய வீரர்களை இலங்கை மண்ணில்‌ கோழைத்தனமாக கொன்று குவித்தவர்கள்‌ நன்றிகெட்ட விடுதலை புலிகள்‌. இவர்களின்‌ துரோகத்தை மறைக்கும்‌ சீமானை விட தேசத்துரோகி எவரும்‌ இருக்க முடியாது.
 
பயங்கரவாதி பிரபாகரனின்‌ சதி திட்டத்தால்‌ பலியாக்கப்பட்ட ராஜீவ்காந்தியின்‌ உயிர்தியாகத்தை பகிரங்கமாக கொச்சைபடுத்தும்‌ கொடூரன்‌ சீமானை தமிழர்கள்‌ ஒருபோதும்‌ மன்னிக்க மாட்டார்கள்‌. அன்று விடுதலை புலிகளால்‌ ராஜீவ்‌ காந்தி படுகொலை செய்யப்பட்ட போதும்‌, தொடர்ந்து 1991 தேர்தல்‌ நடைபெற்ற போதும்‌ ஒட்டுமொத்த தமிழ்ச்‌ சமுதாயம்‌ வெளிப்படுத்திய அனுதாபத்தையும்‌ காங்கிரசுக்கு வழங்கிய ஆதரவையும்‌ அரசியல்‌ கோமாளி சீமான்‌ அறிய வாய்ப்பில்லை.
 
பாரத ரத்னா முன்னாள்‌ பிரதமர்‌ ராஜிவ்காந்தி படுகொலையை நியாயப்படுத்தி, வன்முறையை தூண்டி, பொது அமைதியை குலைக்கும்‌ வகையில்‌ பேசிய சீமானை தேசத்துரோக குற்றம்‌ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில்‌ வழக்கு பதிவு செய்ய வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ்‌ சார்பில்‌ கேட்டு கொள்கிறேன்‌. இத்தைகைய தேசவிரோத செயலில்‌ ஈடுபட்ட சீமானை தலைவராக கொண்ட நாம்‌ தமிழர்‌ கட்சிக்கான அங்கீகாரத்தை இந்திய தேர்தல்‌ ஆணையம்‌ உடனடியாக ரத்து செய்ய வேண்டும்‌. இதற்கான புகாரகளை காவல்துறையிடமும்‌, தேர்தல்‌ ஆணையத்திடமும்‌ தமிழ்நாடு காங்கிரஸ்‌ சார்பில்‌ வழங்கப்படும்‌ என தெரிவித்து கொள்கிறேன்‌.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது