தொடர்புடைய செய்திகள்
- அயோத்தி கோவில் சிறப்பம்சங்கள்.! 392 தூண்கள், 44 கதவுகள்.! பிரமிக்க வைக்கும் ராமர் கோவில்.!!
- யாரும் யாரையும் அடக்கவில்லை.. ஆளுனர் கூறியது உண்மையில்லை! – கோதண்டராமர் கோவில் அர்ச்சகர் விளக்கம்!
- ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை வைக்கப்படுவது ஏன்? – இதுதான் காரணம்!
- விழாக்கோலம் பூண்ட அயோத்தி..! பிரதமர் மோடி வருகை.! குவிந்த பிரபலங்கள்..!!
- ராமரை பிரதமர் மோடி இதுவரை பின்பற்றியதே இல்லை: சுப்பிரமணியன் சுவாமி
ராமர் கோயில் திறப்பை முன்வைத்து மக்கள் வாக்களிப்பார்களா? கார்த்தி சிதம்பரம்
ராமர் கோவில் திறப்பை மையமாக வைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். மதுரையில் உள்ள திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் இல்ல விழாவில் கலந்து கொண்ட கார்த்திக் சிதம்பரம் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது
ராமர் கோயில் திறப்பு நிகழ்வை காங்கிரஸ் கட்சி அரசியலாகத் தான் பார்க்கிறது. மத நம்பிக்கை என்பது தனிநபரின் விருப்பம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அதை பின்பற்றுவதில் தவறில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி முழுமையாக தயாராக உள்ளது. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் புதிய கட்சிகள் கூட்டணிக்கு வர உள்ளன.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்திலிருந்து ஒரு ரூபாய் வரி கட்டினால் ஒன்றிய அரசு ஒரு ரூபாய்க்கு குறைவாகவே நிதி வழங்குகிறது. வடமாநிலங்களில் ஒரு ரூபாய்க்கு குறைவாக வரி கட்டினால் ஒரு ரூபாய்க்கு அதிகமாகவே நிதி வழங்குகிறது. முன்னேறுகிற மாநிலங்களில் கல்வி, சுகாதாரம் போன்ற திட்டங்களை செயல்படுத்த ஒன்றிய அரசு மறுக்கிறது.
மக்களவைத் தேர்தலுக்காக தமிழக காங்கிரஸ் கமிட்டியில் மேலிடப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுகவுடன் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தையை துவங்க உள்ளோம். காங்கிரஸ் கட்சி அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்து அடையாள அட்டை வழங்கி உள்ளோம். அயோத்தி கோயில் திறப்பை முன்வைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். 10 ஆண்டுகளாக பாஜக செய்த திட்டங்களின் அடிப்படையிலேயே மக்கள் வாக்களிப்பார்கள்” இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
Edited by Siva
