வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 18 மே 2018 (15:40 IST)

கர்நாடக ஆளுனரா இல்லை பாஜகவின் ஏஜெண்டா? - வைகோ விளாசல்

கர்நாடகா முதலமைச்சர் விவகாரத்தில், ஆளுநரின் செயல்பாடுகள் சரியல்ல என மதிமுக செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

 
கர்நாடகாவில் யார் முதல்வர் என தீர்மானிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை கர்நாடக சட்டசபையில் நடைபெற இருக்கிறது.
 
ஆட்சி அமைக்க காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு போதுமான எம்.எல்.ஏக்கள் இருந்தும், பாஜக எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநர் அழைப்பு விடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், எடியூரப்பா தனது மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் இருப்பதால், குதிரை பேரம் நடத்த வாய்ப்பிருப்பதாக கருத்து நிலவியது.
 
இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த வைகோ “கர்நாடகாவில் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பாஜகவை ஆட்சீய்ல் ஆளுநர் அமர்த்தியுள்ளார். இது திட்டமிட்ட ஜனநாயகப் படுகொலை.  கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலா பாஜகவின் ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார். அவரின் இந்த நடவடிக்கையால், அங்கு குதிரை பேரம் நடைபெற்று, நாட்டின் அரசியலமைப்பு சட்டம் கேள்விக்குறியாகியுள்ளது. காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் அவர்கள் நினைத்ததை சாதித்து விட்டனர். தமிழகத்திற்கு எதிராகவே மத்திய அரசும் எப்போதும் செயல்பட்டு வருகிறது” என குற்றம் சாட்டினார்.