வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 17 மே 2018 (17:16 IST)

கர்நாடக ஆளுநர் முடிவால் சிக்கல் - பல மாநிலங்களில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் போர்க்கொடி

கர்நாடக தேர்தலில் இரு பெரிய கட்சிகளும் பெரும்பான்மையை பெறாத நிலையில், யார் ஆட்சி அமைப்பது என்ற குழப்பம் நீடித்து வந்த போது ஆளுநர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தது.

 
பாஜக 104 இடங்களை பெற்றுள்ளது. ஆனால், காங்கிரஸ் - மஜத கூட்டணிக்கு 116 இடங்கள் இருக்கிறது. ஆட்சி அமைக்க 112 எம்.எல்.ஏக்கள் போதும் என்றாலும், தனிக்கட்சியாக அதிக இடங்களை பெற்ற பாஜகவை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவர் தனது பலத்தை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், கர்நாடகாவில் ஆளுநர் எடுத்த முடிவை உதாரணம் காட்டி, அதிக இடங்களை பெற்ற கட்சியான தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டுமென கோவா, மணிப்பூர், மேகாலயா, ஆகிய மாநிலங்களில்  காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நாளை அந்தந்த மாநில ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி செல்ல இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், பீகாரில் அதிக இடங்களை பெற்ற ராஷ்டிரிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் நாளை பீகாரில் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி செல்ல இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்த 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதிக இடங்களை பிடித்திருந்தாலும், இதர கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து அங்கு பாஜக ஆட்சியில் அமர்ந்தது. தற்போது கர்நாடக ஆளுநர் எடுத்த முடிவால், இது பாஜகவிற்கு பாதகமாக திரும்பியுள்ளது.