1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 4 ஏப்ரல் 2018 (16:21 IST)

காவிரி பிரச்னையை பற்றி கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்: அமைச்சர் ஜெயக்குமார்

காவிரி பிரச்சனைக்காக அதிமுகவினர் நேற்று உண்ணாவிரதம் இருந்ததை இன்று கமல் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மத்திய அரசின் எடுபிடியாக மாநில அரசு செயல்படுகிறது என்றும் காவிரிக்காக உண்ணாவிரதம் இருப்பது நாடகம் என்றும் கமல் கூறியிருந்தார்

கமல்ஹாசனின் இந்த விமர்சனத்திற்கு அமைச்சர் ஜெயகுமார் சற்றுமுன் செய்தியாளர் சந்திப்பில் பதிலடி கொடுத்துள்ளார். காவிரி பிரச்சனை குறித்து கமல்ஹாசனுக்கு என்ன தெரியும் என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெயகுமார், காவிரி பிரச்சனைக்கு முழு காரணம் திமுக தான் என்பதை மறைத்துவிட்டு அவர் அதிமுகவை விமர்சனம் செய்வது அவரது அறியாமையை காட்டுவதாக தெரிவித்தார்.

மேலும் கமல்ஹாசனை ஒரு நல்ல நடிகராக வேண்டுமானால் மக்கள் ஏற்று கொள்வார்கள் என்றும், அரசியல்வாதியாக இன்னும் அவர் பக்குவமடையவில்லை என்றும் அவர் தெரிவித்தார். விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி குறித்து சுட்டிக்காட்டியதும் நாட்டைவிட்டே வெளியேறுவேன் என்று கூறிய கமல், திடீரென மக்களிடம் பாசமழை பொழிவதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்றும் அமைச்சர் ஜெயகுமார் கூறினார்