1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2022 (18:36 IST)

கிராம சபையை அடுத்து ஏரியா சபை: தமிழக அரசுக்கு கமல் பாராட்டு

Kamal
கிராம சபையை அடுத்து ஏரியா சபை அமைக்கப்படும் என அறிவித்த தமிழக அரசுக்கு கமல் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
கிராம சபைகளைப் போலவே, நகர்ப்புற மக்கள் பங்கேற்பு ஜனநாயகத்திற்கு வழிகோலும் ஏரியா சபை, வார்டு கமிட்டிகளை அமைப்பதற்கான சட்டம் 2010-இல் கொண்டுவரப்பட்டது. இவற்றை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளைத் தமிழக அரசு வகுக்காததால் இந்தச் சட்டம் 12 ஆண்டுகளாகச் செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது.
 
இதற்கான விதிகளை வகுக்கக் கோரி மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரலெழுப்பிவந்தது. நான் கடந்த பிப்ரவரியில் தமிழக அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து இது குறித்து வலியுறுத்தினேன். ஏரியா சபைகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என மார்ச் மாதம் தமிழக முதல்வர் அறிவித்தார்.
 
தற்போது ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைப்பதற்கான விதிமுறைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளதை மநீம வரவேற்கிறது. இவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதைத் தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் பங்கேற்பை உறுதி செய்யும் உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தும் மநீமவின் பணிகள் தொடரும்.