1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2019 (15:30 IST)

இங்க வந்திருந்தா எப்போதும் ஹீரோ… அங்கப் போனதால நாளைக்கே ஜீரோ – ஜெயக்குமார் கேலி !

தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்திருப்பது குறித்து அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.

தங்க தமிழ்ச்செல்வனுக்கும் அமமுக தலைவர் டிடிவி தினகரனுக்கும் இடையிலானப் பனிப்போர் கடந்த வாரத்தில் முடிவுக்கு வந்துள்ளது. தங்க தமிழ்ச்செல்வன், தினகரனைக் கடுமையா திட்டி பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து அவர் அமமுகவில் இருந்து நீக்கப்பட்டார். எனவே, அவர் அதிமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிரடி திருப்பமாக சற்று முன்னர் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுகவில் இணைந்தார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மஞ்சள் கலர் சால்வையைப் போர்த்தி தன்னை திமுக வில் இணைத்துக்கொண்டார். இந்த சந்திப்பின் போது திமுக வின் முக்கியத் தலைவர்களான செ்ந்தில் பாலாஜி. வி.பி.கலைராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது ‘தமிழகத்தை திமுக தலைவர் ஸ்டாலினால் மட்டுமேக் காப்பாற்ற முடியும் என மக்கள் தேர்தல் மூலம் சொல்லியுள்ளனர். மக்களின் அந்த தீர்ப்பை மதித்து நான் திமுகவில் இணைந்துள்ளேன்’ எனக் கூறினார். இது சம்மந்தமாக அதிமுக மீன்வளத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பியபோது ‘ அவர் எந்தக் கட்சியில் சேரவேண்டும் என்பது அவரது தனிப்பட்ட விருப்பம். அவர் இங்கு வந்திருந்தால் எப்போதும் ஹீரோ. அங்கு சென்றதால் நாளைக்கே அவர் ஜீரோதான்’ எனக் கூறியுள்ளார்.