1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ்கியான்
Last Updated : வியாழன், 12 செப்டம்பர் 2019 (15:32 IST)

டி.டிவி.,தினகரன் அரசியலில் தேறுவாரா ? அமமுக., புகழேந்தி பாஜகவில் தஞ்சமா? அரசியலில் பரபரப்பு

தமிழக அரசியலில் இன்று ஏகப்பட்ட கருத்து மோதல்கள், விவாதங்கள், குற்றச்சாட்டுகளும் அடுத்தடுத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் மீது விழுவது வாடிக்கைதான் என்றாலும், புதிய கட்சிகளின் மீது ஏன் இத்தனை விமர்சனங்கள் குவிகிறது என்பதை நம்மால் யூகிக்க முடிகிறதா ?
 

அது எந்தக் கட்சி என்றால் டிடிவி தினகரனின் அமமுக தான் ! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர், அவர் போட்டியிட்டு வென்ற ஆர் .கே .நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, இருபெரும் திராவிட கட்சிகளுக்குப் போட்டியாய் தன் அரசியல் பயணத்தை ஆரம்பித்தார் டிடிவி.,தினகரன்.

அடுத்து, 2017 ஆம் ஆண்டில், டிசம்பர் 21 ஆம் தேதி, இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஏராளமான பணம் புழங்கியதாக பலரும் புகார் கூறினார்கள். நிச்சயமாக, ஆளும் கட்சி அதிமுக, இல்லை என்றால் சென்னையில் ஓட்டுச் செல்வாக்கு உள்ள திமுக தான் வெற்றிபெரும் என எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்க, சுயேட்சையாய் போட்டியிட்ட தினகரன் வெற்றிபெற்று, இரு பெரும் திராவிட கட்சிகளுக்கு தண்ணிர் காட்டினார்.

அதன்பிறகு, எத்தனையே விமர்சனங்கள் தினகரன் மீது எழுந்தது, டோக்கன் கொடுத்து குக்கர் வெற்றி பெற்றது என அவரை நேராகவே குற்றம் சுமத்தினார்கள். நடிகர் கமல்ஹாசனும் இதை விமர்சனம் செய்தார். அதற்கு, டிடிவி தினகரன் வெகுண்டார்.
இதனைத் தொடர்ந்து காலம் மாறியது, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கமலின் கட்சியை விட ஓட்டு சதவீதத்தில் தினகரனின் அமமுக வீழ்ச்சி அடைந்தது. இது அவரது அரசியல் வாழ்வில் பெரும் சரிவை ஏற்படுத்தியது. அதிமுகவின் எதிர்ப்பாளர்களைத் திரட்டித் தன் பக்கம் வைத்துக்கொண்டு, அவர் நடத்திவந்த அமமுகவின் கட்சி  கோட்டை இன்று விரிசல் அடைந்துள்ளது. அங்கிருந்து, விலகி சென்ற செந்தில் பாலாஜி திமுகவில் ஐக்கியமாகி பதவிபெற்று எம்.எல்.ஏவானதும்,  தங்கத் தமிழ்ச்செல்வன் கழன்று திமுகவில் பதவிபெற்றுள்ளது என பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில்,  தற்பொழுது, அமமுக செய்தி  தொடர்பாளர் புகழேந்தி, தினகரனை பங்கமாக விமர்சிப்பதும் தொடர்ந்து கொண்டுள்ளது.
 

இந்த நிலையில் , தினகரனை  நான்தான் தமிழகத்தில் அறிமுகம் செய்து வைத்தேன் என்று கூறிய புகழேந்தி, தன் அரசியல் எதிர்காலத்திற்காக, கர்நாடக பாஜவில் தஞ்சம் அடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. ஏனென்றால், அவர்,  நடைபெற்று முடிந்த தேர்தலில் நோட்டாவைவிட குறைந்த வாக்குகள் பெற்றது அவரது தமிழக அரசியல் வாழ்வைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. மேலும் திராவிட கட்சிகளை, தினகரன் உடன் சேர்ந்து பகைத்துக்கொண்டதாலும் கூட இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகிறது.

இப்படி ஒவ்வொருவராக அமமுக கூடாரத்தை காலி செய்துவரும் நிலையில், அங்கிருந்து முதலில் வெளியேறி, திமுகவில் தஞ்சமடைந்துள்ள பேச்சாளர் நாஞ்சில் சம்பத், அமமுக ஒரு கம்பெனி என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, அதிமுகவுடன் முரண்பாடு ஏற்பட்டு, பிரிந்த போது, அக்கட்சியின் இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
 

அவர் எல்லாவற்றையும் விலை கொடுத்து வாங்க முடியாது என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். அண்ணா தனது அன்பால் திமுகவை வளர்த்தார். மக்கள் மனதில் இடம் பிடித்தார்! இத்தனைக்கும் அவரிடம் எந்தப் பணமும் இல்லை. அண்ணாவின் தூய சொல்லும், எளிமையும் அவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது. அவரது வழியில் அரசியலில் தடம்பதித்து மக்களின் இதயதெய்வமானார் எம்ஜிஆர். அவர் அடையாளம் காட்டிய ஜெயலலிதா 6 முறை மக்களின் மனதில் இடம்பிடித்து, தான் இறப்பு வரை முதல்வராக இருந்தார். எனவே, இவர்களை அடித்தொற்றி வரும் தினகரன் இன்னும் அரசியலில் கற்றுக்கொள்ள ஏராளமான விசயங்கள் உண்டு. மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது போல காண்பதெல்லாம் மெய்யல்ல என்பதைக்கண்டு தினகரன் தெளிவுபெற வேண்டும் என அரசியல்விமர்சகர்கள் அவருக்கு எச்சரிக்கை  விடுக்கிறார்கள்.