1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (10:58 IST)

வீட்டு வாடகை கேட்டதால் விபரீதம்: ஹவுஸ் ஓனருக்கு கத்திக்குத்து!

சென்னையில் வீட்டு வாடகை தராத விவகாரத்தில் குடியிருந்தவர், ஹவுஸ் ஓனர் இடையே ஏற்பட்ட மோதலி ஹவுஸ் ஓனரின் குடும்பமே கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூளைமேடு பகுதியில் வசிப்பவர் சந்திரமோகன். இவர் தனது வீட்டின் மேல்மாடி பகுதியை நாராயணன் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். பெயிண்டர் வேலை பார்த்து வரும் நாராயணனுக்கு கொரோனா காரணமாக வருமானம் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நாராயணனிடம் சந்திரமோகன் வீட்டு வாடகை கேட்டு வந்துள்ளார்.

வீட்டு வாடகை தராமல் நாராயணன் தாமதப்படுத்தவே சந்திரமோகன் தனது மகன் சதீஷுடன் நாரயணனிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சத்தம் கேட்டு சதீஷின் மனைவி சுகன்யா அங்கு வந்துள்ளார். வாக்குவாதம் முற்றவே வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்த நாராயணன் மூவரையும் சராமாரியாக கத்தியால் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளார்.

கத்தியால் தாக்கப்பட்ட மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுகன்யா சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான நாராயணனை கைது செய்துள்ளனர்.