வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 19 பிப்ரவரி 2018 (18:36 IST)

ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்- ஆரம்பம் முதல் தண்டனை வரை

ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



சென்னை மவுலிவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாபு என்பவரின் மகள் ஹாசினி(6) வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருக்கும் போது திடீரென காணாமல் போனார். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 
 
விசாரணையில், அதே குடியிருப்பில் வசித்து வந்த மென்பொருள் பொறியாளர் தஷ்வந்த் குற்றவாளி என்பது தெரியவந்தது. தஷ்வந்த் கையில் பையை எடுத்துச் சென்ற சிசிடிவி கேமரா காட்சி மூலம் சந்தேகம் அடைந்த போலீஸார் விசாரணை நடத்தியதில் தஷ்வந்த சிக்கினார். ஹானிசியை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக்கொன்றதை ஒப்புக்கொண்டார்.
 
இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. 6வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைந்தனர். பின்னர் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் அவர் மீது இருந்த குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. 
 
ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். செலவு பணம் கொடுக்காத தாயை கொன்றுவிட்டு மும்பை தப்பிச் சென்றார். பின்னர் இவரை காவல்துறையினர் தேடி கண்டுபிடித்து மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.
 
ஹாசினி தொடர்பான கொலை வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. இந்த விசாரணையில் இதுவரை 34 பேர் சாட்சியம் பெறப்பட்டுள்ளது, 42 ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. 
 
குற்றவாளி தஷ்வந்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆள் கடத்தல், பாலியல் துன்புறுத்தல், கொலை உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் தஷ்வந்த குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
 
நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் ஹாசினியின் தந்தை கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நெஞ்சை உருக்கியது. மேலும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எனது மகளுக்கு ஏற்பட்டதுபோல் வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்று கூறியுள்ளார்.