செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (22:11 IST)

கிரானைட் கொள்ளை விவகாரம் - பி.ஆர்.பி. உள்ளிட்ட 3 நிறுவனம் மீது குற்றப் பத்திரிகை; ரூ.120 கோடி இழப்பு என தகவல்

பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்டோர் மீதான 3 கிரானைட் முறைகேடு வழக்குகளில் 1,158 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரூ.120 கோடி அளவில் அரசுக்கு இழப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கீழவளவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் முறைகேடு நடந்திருப்பதாகவும், மேலும் பட்டா இடங்களில் கிரானைட் கற்களை அடுக்கி வைத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் குற்றச் சாட்டுகள் எழுந்தன. வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
 
இதன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் உள்பட 3 நிறுவனங்கள் ரூ. 121 கோடி அளவிற்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, தற்போது மேலூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
3 நிறுவனங்கள் குறித்தும் தனித்தனியாக அதன் விசாரணை அதிகாரிகள், நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.
 
இதன்படி பி.ஆர்.பி. கிரானைட் தொழிற்சாலை அய்யம் பட்டிகுளம், ஆண்டி மக்கள் கோவில், அரசன் மக்கள் கோவில் ஆகியவற்றை ஆக்கிரமித்தது தொடர்பாக, காவல் ஆய்வாளர் ராஜாசிங், 166 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.
 
அதில் ரூ.12 லட்சத்து 20 ஆயிரம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 21 பேர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
 
மற்றொரு வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி, அவரது மனைவி ராஜாத்தி உள்பட 19 பேர் ரூ. 2 கோடியே 31 லட்சம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக 310 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
இதேபோல் பி.எஸ். கிரானைட் நிறுவனம் மீது, 682 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ள காவல் ஆய்வாளர், ரூ. 118 கோடியே 26 லட்சம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
 
இந்த 3 வழக்குகளிலும், அரசுக்கு ரூ.120.51 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.