வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: வெள்ளி, 22 மே 2020 (22:32 IST)

ஏழை, எளிய மக்கள் பாராட்டும் அரசாக தமிழக அரசு - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

பல விமர்சனங்கள் சொன்னாலும் ஏழை, எளிய மக்கள் பாராட்டும் அரசாக தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறத என  கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்புக் கடன் உதவி திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சுய உதவிக் குழுக்களுக்கான கடன் தொகைக்கான காசோலைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தை சார்ந்த 448 நபர்கள் அடங்கிய 40 குழுவினர்களுக்கு 22 லட்சத்து 40 ஆயிரம் கடன் தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டது.ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்காமல் தடுக்கும் வகையில் இந்த சிறப்பு கடனுதவி திட்டம் மூலம் வழங்கப்பட்டது. அப்போது பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,உலகமே முடங்கிக் கொண்டிருக்கும் இந்த நிலையில், இந்திய அளவில் தமிழகத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் கொரனோ கட்டுக்குள் கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை யாருக்கும் கொரனோ தொற்று இல்லாத நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு தான் கொரனோ உறுதி செய்யப்படுகிறது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். பல விமர்சனங்கள் சொன்னாலும் ஏழை, எளிய மக்கள் பாராட்டும் அரசாக தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திட்டங்களை அம்மாவின் அரசு வழங்குகிறது.

சுய உதவிக் குழுக்களுக்கு குறைவான வட்டியில் கடன் வழங்குவதன் மூலம் அந்த குடும்பமே முன்னேற்றம் அடையும் என்றார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட அ.தி.மு.க அவைத்தலைவரும், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ஏ.ஆர்.காளியப்பன், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உள்ளிட்டோர் ஏராளமானோர் இருந்தனர்.