1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 18 மே 2020 (15:58 IST)

புதுச்சேரியில் நாளை மதுக்கடைகள் திறப்பு: திமுக எதிர்ப்பு தெரிவிக்குமா?

தமிழகத்தில் கடந்த 7ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டபோது கடுமையாக எதிர்த்த கட்சிகளில் ஒன்று திமுக என்பதும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனது வீட்டின் முன் கருப்புக்கொடி காட்டி கடுமையாக தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளுக்கு தடை விதிக்க, உயர் நீதிமன்றம் அந்த தடைக்கு தடை விதித்தது என்பதும் தெரிந்ததே. தற்போது கடந்த சனிக்கிழமை முதல் மீண்டும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மது வியாபாரம் ஜோராக நடந்து வருகிறது. இருப்பினும் திமுக உள்பட மற்ற அரசியல் கட்சிகள் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை விடாமல் செய்து வருகின்றனர்
 
இந்த நிலையில் புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும் என புதுவை அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாளை காலை 7 மணிமுதல் புதுவையில் மது கடைகள் திறக்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த திமுக, தமிழகத்தில் இரண்டு மணி நேரம் மதுக்கடைகள் அதிகரிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தபோது எதிர்ப்பு தெரிவித்து திமுக, தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி செய்யும் புதுச்சேரியில் நாளை முதல் 12 மணி நேரம் மதுக்கடைகளை திறக்க இருப்பதாக எடுத்துள்ள முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 
 
அதேபோல் தமிழகத்தில் மதுக் கடைகள் திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் தனது கட்சி ஆட்சி செய்யும் புதுவையில் எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்