1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 4 ஜூலை 2022 (23:17 IST)

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி படித்த பள்ளியில் வரலாறு பாடப் பிரிவு நீக்கம்

திருவாரூரில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி படித்த பள்ளியில் வரலாறு பாடப் பிரிவு நீக்கப்பட்டதை கண்டித்து முன்னாள் மாணவர்கள், வர்த்தக சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
 
திருவாரூர் நகர் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இல்லை. இதனால் நகர் பகுதியில் செயல்பட்டு வரும்  அரசு உதவி பெறும் வ. சோ .ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பயின்றுள்ளார். 
 
இந்நிலையில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் உள்ள வரலாறு பாடப் பிரிவை  பள்ளி நிர்வாகம் திடீரென்று நீக்கம் செய்துள்ளது.இதுகுறித்து தகவலறிந்த பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 
இதனிடையே பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பொது நல சங்கங்கள், வர்த்தக சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.
 
அதன்படி, இன்று திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் 25 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நீக்கப்பட்ட வரலாறு பாடப்பிரிவை உடனடியாக சேர்க்க வேண்டும் வலியுறுத்தப்பட்டது.
 
ஆர்ப்பாட்டத்தில் வர்த்தக சங்கத் தலைவர் சி.ஏ.பாலு, பொதுச் செயலாளர் குமரேசன், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.