வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 9 ஜூலை 2024 (12:59 IST)

தொடரும் பட்டாசு ஆலை வெடி விபத்து.! சிவகாசி அருகே 2-பேர் பலி..!!

Explosion
சிவகாசி அருகே  பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
தமிழ்நாட்டில் உள்ள பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துக்கள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த வெடி விபத்துகளில் உயிரிழப்பு போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எம்.புதுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காளையார்குறிச்சியில் நாக்பூர் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை உரிமம் பெற்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு 80-க்கும் மேற்பட்ட அறைகளில் 200-க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 
 
இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பட்டாசுகளுக்கு வெடி மருந்துகளை செலுத்தும் போது  உராய்வு ஏற்பட்டு காரணமாக வெடி விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் அந்த அறையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஆமத்தூர் அருகே சிதம்பராபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் (45), முத்துவேல் (45) ஆகிய இருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 
மேலும் சித்தமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரோஜா( 55), செவலூரைச் சேர்ந்த சங்கரவேல்(54) ஆகியோர் 60 சதவீத தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.