திங்கள், 29 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 31 அக்டோபர் 2019 (21:04 IST)

உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் போட்ட கண்டிஷனால் அதிர்ச்சியில் அதிமுகவினர்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் அதோ இதோ என்று இழுத்துக்கொண்டே சென்று நிலையில் தற்போது வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து அரசியல் கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. 
 
இந்த நிலையில் சமீபத்தில் சேலம் சென்றிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், அம்மாவட்டத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து அவசர ஆலோசனை செய்தார். உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுவது உறுதி என்றும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் குறித்த பட்டியலை உடனடியாக தயாரிக்குமாறும், வேட்பாளர்கள் பட்டியலில் எம்எல்ஏ, எம்பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் தலையீடு எதுவும் இருக்காது என்றும், உண்மையிலேயே மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள், வெற்றி பெற தகுதியுடையவர்கள், சுத்தமானவர்கள் கொண்ட வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியை தொடங்குங்கள் என்றும் முதல்வர் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு உள்ளதாக தெரிகிறது 
 
வேட்பாளர் பட்டியலில் ஏதும் தவறுகள் மற்றும் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டால் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலில் தங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பணம் வாங்கிக்கொண்டு வாய்ப்பு பெற்றுத் தரலாம் என்று அதிமுக நிர்வாகிகள் எண்ணியிருந்த நிலையில் அதற்கு முதல்வர் முட்டுக்கட்டை போட்டுள்ளது அவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது 
 
மொத்தத்த்ஹில் உள்ளாட்சி தேர்தலில் கிடைக்கும் வெற்றி தான், அதிமுக தொண்டர்களுக்கு கிடைக்கும் உற்சாகம் என்றும் அதே உற்சாகத்தோடு சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்கலாம் என்பதுதான் முதல்வரின் திட்டம் என்றும் கூறப்படுகிறது