1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஜூலை 2019 (10:53 IST)

என் மகனாகப் பார்க்காதீர்கள் … திமுக காரனாகப் பாருங்கள் – துரைமுருகன் உருக்கம் !

வேலூரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை என் மகனாகப் பார்க்காமல் திமுக காரனாகப் பார்க்குமாறு திமுக பொருளாளர் துரைமுருகன் உருக்கமாகப் பேசியுள்ளார்.

வேலூர் தொகுதிக்கு மட்டும் ரத்து செய்யப்பட்ட மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மீண்டும் நடக்க இருக்கிறது. இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்தும் அதிமுக சார்பில் ஏ சி சண்முகமும் மீண்டும் போட்டியிடுகின்றனர், இந்நிலையில் ரஜினியின் நண்பரான ஏ சி சண்முகத்துக்கு ஆதரவாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பலர் களத்தில் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் திமுகவினர் சிலர் கலக்கத்தில் உள்ளனர்.

வேலூர் தேர்தல் தொடர்பான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று மாலை அன்பகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் ‘வேலூர் தேர்தலை துரோகத்தின் மூலமும், அதிகாரத்தின் துணைக்கொண்டும் நிறுத்தினர். தேர்தல் நிறுத்தம் பற்றிய அறிவிப்பு வந்த போது துடித்துப்போன என்னை தளபதிதான் ஆறுதல் சொல்லி தேற்றினார். வேலூர் தொகுதியில் துரைமுருகன் மகன் நிற்கிறான் என்று பார்க்காதீர்கள். ஒரு ‘திமுக’காரன் நிற்கிறான், கட்சியின் ஊழியன் நிற்கிறான் என்று நினைத்து வேலை செய்யுங்கள்’ என உருக்கமாகப் பேசியுள்ளதாக திமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.