1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: திங்கள், 30 அக்டோபர் 2023 (12:41 IST)

இந்து கோவில்கள் வேண்டாம்.. ஆனால் கோவில் சொத்துக்கள் வேண்டுமா? – பொன்.மாணிக்கவேல் ஆவேசம்!

Pon Manickavel
ஆட்சியாளர்கள் இந்து கோவிலுக்குள் வருவதில்லை ஆனால் இந்து கோவில்களின் சொத்துக்களை ஆள நினைப்பது தவறு - பொன்.மாணிக்கவேல்


 
சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரியும்,முன்னாள் ஐ.ஜியுமான பொன்.மாணிக்கவேல் வருகைபுரிந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் ஸ்தலவரலாறு புத்தகம் கொடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து பிரம்மபுரீஸ்வரர்சுவாமி,சட்டைநாதர்சுவாமி,மலைமீது அருள்பாலிக்கும் தோணியப்பர்}உமாமகேஸ்வரிஅம்மன்,சட்டநாதர் சுவாமி மற்றும் திருஞானசம்பந்தர்,திருநிலைநாயகிஅம்மன் சுவாமி சந்நிதிகளில் பொன்.மாணிக்கவேல் சுவாமி தரிசனம் செய்தார்.

அதன்பின்னர் சட்டநாதர்கோயில் வளாகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கண்டெடுக்கப்பட்ட 23 சுவாமி ஐம்பொன் திருமேனிகள்,தேவாரபதிகம் தாங்கிய செப்பேடுகள் ஆகியவை கோயில் பள்ளியறை அருகே தனிபாதுகாப்பு அறை அமைக்கப்பட்டு பூட்டி சில்வைக்கப்பட்டுள்ளது.

இதனை பொன்.மாணிக்கவேல் பார்வையிட்டு சுவாமி திருமேனிகளின் காலம் மற்றும் அதன் வரலாறு ஆகியவை குறித்து கோயில் கணக்கர் செந்திலிடம்  கலந்துரையாடினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார்.

அப்பொழுது அவர் கூறுகையில், சீர்காழி சட்டைநாதர் கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட திருமேனிகள் (தெய்வ விக்கிரகங்கள்) சட்டை நாதர் கோவிலில்தான் வைக்க வேண்டும். இதனை அரசு கையகப்படுத்தக் கூடாது. பூமிக்கு அடியில் பொருள்கள் அல்லது பொக்கிஷங்கள் கிடைத்தால் தான் அரசு கையகப்படுத்த வேண்டும்.

தெய்வ திருமேனிகளை அரசு கையகப்படுத்தக் கூடாது அப்படி கையகப்படுத்த நினைத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இந்துக்கள் ஒற்றுமையுடன் அரசை எதிர்த்து போராட வேண்டும்.

தமிழகத்தில் 1975 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 38 ஆயிரம் கோவில்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்து மதம் மற்றும் ஆன்மீகம் அழிந்து வருகிறது. ஆட்சியாளர்கள் இந்து கோவிலுக்குள் வருவதில்லை ஆனால் இந்து கோவில்களின் சொத்துக்களை ஆள நினைப்பது தவறு இதேபோல் சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வர் உள்ளிட்ட பல்வேறுகோயில்களில் கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட சிலைகளை கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை மீட்க இந்துக்கள் முன்வர வேண்டும். இது தொடர்பாக நான் வழக்கு தொடர உள்ளேன்” என்றார்.