1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 27 ஜூலை 2018 (16:10 IST)

கருணாநிதிக்கு ஏன் வீட்டிலேயே சிகிச்சை? - வெளியான தகவல்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.  

 
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 2 வருடங்களாக வயது முதிர்வு மற்றும் உடல் நிலை கோளாறு காரணமாக ஓய்வில் இருப்பதால் தீவிர அரசியலில் இருந்து  ஒதுங்கி இருக்கிறார். அவரது தொண்டையில் ட்ரக்கியாஸ்டமி கருவி பொருத்தப்பட்டிருப்பதால் பேச முடியாத நிலையில் அவர் இருக்கிறார். கடந்த 18ம் தேதி காவேரி மருத்துவமனைக்கு அவர் வந்தார். ட்ரக்கியாஸ்டமி சிகிச்சையில் பழைய குழாய் அகற்றப்பட்டு 4வது முறையாக அவருக்கு புதிய குழாய் பொருத்தப்பட்டது. கடந்த 2 வருடங்களாகவே அவர் வாய் மூலமாகத்தான் சுவாசித்து வருகிறார்.
 
இந்நிலையில்தான், அவரின் உடல் நிலையில் நேற்று இரவு நலிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காவிரி மருத்துவமனையில் இருந்து நான்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கோபாலபுரம் இல்லம் சென்று அவருக்கு சிகிச்சை அளித்தனர். அவருக்கு காய்ச்சல் மற்றும் சீறுநீரக தொற்று ஏற்பட்டிருப்பதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரை சந்திக்க தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் எனவும் மருத்துவமனை சார்பில் கேட்டுகொள்ளப்பட்டது.
 
அவரின் உடல்நிலை தேறி வருகிறது. காய்ச்சலும், சிறுநீரக தொற்றும் குறைந்து வருகிறது என இன்று மாலை மு.க.ஸ்டாலின் கூறினார். இது திமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், அவரை ஏன் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கவில்லை என்கிற கேள்வி எழுந்துள்ளது.

 
இதுபற்றி காவிரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்த போது சில தகவல்கள் தெரிய வந்துள்ளது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் படியை கருணாநிதி தாண்டிவிட்டார். அங்கு பிற நோயாளிகள் இருப்பதால் நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவேதான் அவரின் இல்லத்திலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அவரின் உடலில் இதயதுடிப்பு மட்டுமே இருக்கிறது. யாரையும் அவரால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.
 
அவரின் உடலை பாதித்த மீசெல்ஸ் நோய்க்காக கடந்த 2 வருடங்களாக அவர் மருந்துகளை உட்கொண்டார்.  அந்த மருந்துகளால்தான் அவரின் உடல் உறுப்புகள் இயங்கிக் கொண்டிருந்தது. தற்போது நுரையீரலும், சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அளிக்கப்படும் குளுக்கோஸ் உடலை விட்டு வெளியேறுவதால் அதையும் மருத்துவர்கள் நிறுத்திவிட்டார்களாம். அவரின் அறைக்குள் ஸ்டாலின், மு.க.முத்து ஆகியோரை தவிர யாரும் அனுமதிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
 
குறிப்பாக, வயது மூப்பு காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவரின் உடல்நிலை இல்லை எனக்கூறப்படுகிறது. 
 
மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் கலைஞர் கருணாநிதி.