1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 15 ஜூலை 2019 (09:30 IST)

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்ய திமுக ஆய்வுக்குழு

சமீபத்தில் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை திட்டத்தை அறிவித்துள்ள நிலையில் இது குறித்து ஆய்வு செய்ய திமுகவில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார் 
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியதாவது: தமிழ்நாட்டில் மும்மொழித் திட்டத்தை அறிவித்து அதன் மூலம் இந்தியை திணிக்கும் மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த புதிய கொள்கையில் உள்ள இந்தித் திணிப்பு தொடர்பான வாசகங்களை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனாலும் ஏதாவது ஒரு வடிவில் இந்தித் திணிப்பின் தீவிரமாக இருக்கும் மத்திய பாஜக அரசு 2019-20 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கைகள் கூட இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களை நியமித்து அதற்கு நிதி ஒதுக்கீடு கேட்பது முன்னுக்கு பின் முரணாக உள்ளது 
 
இந்த நிலையில் அன்னை தமிழ் மொழியாம் செம்மொழி அச்சுறுத்தலாக இருக்கும் புதிய வரைவு தேசிய கொள்கை பற்றி கல்வி வல்லுநர்களின் கருத்தை அறிய திமுக விரும்புகிறது. எனவே இக்கொள்கை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளித்திட திமுக கழகம் பின்வரும் ஆய்வுக் குழுவை அமைத்துள்ளது 
 
முனைவர் கா பொன்முடி, தங்கம் தென்னரசு, முனைவர் ஆர் ராமசாமி, முனைவர் மா ராஜேந்திரன், முனைவர் கிருஷ்ணசாமி, டாக்டர் ரவீந்திரநாத், பேராசிரியர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் கொண்ட இந்த ஆய்வுக் குழு 10 நாட்களுக்குள் தனது அறிக்கையை தலைமை கழகத்திடம் அளிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில் திமுக கருத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வழங்கப்படும் 
 
இவ்வாறு திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்