வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 பிப்ரவரி 2019 (11:28 IST)

அமைதிக் காக்கும் தேமுதிக ! - கூட்டணிக்கு குறுக்கால் நிற்கும் அஷ்டமி & நவமி

தேமுதிகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டுக் கட்சிகளும் போட்டியில் இருக்க தேமுதிக அஷ்டமி நவமி காரணமாக எந்த முடிவுகளையும் எடுக்காமல் அமைதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழக அரசியல் களம் இப்போது தேமுதிகவை மையமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டு வருகிறது. தேமுதிக இரண்டுக் கட்சிகளில் எந்தக் கட்சி தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவரப் போகிறது என்பதுதான் தமிழக அரசியலின் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி. முதலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணையையேப் பெருமளவில் நம்பியிருந்தது தேமுதிக. இது தொடர்பானப் பேச்சுவார்த்தை பாஜகவுடன் நடைபெற்று வருவதாகவும் தேமுதிக மாநில செயலாளர் எல்.கே. சுதீஷ் தெரிவித்திருந்தார். அதனால் அதிமுக, பாஜக மற்றும் தேமுதிக அடங்கியக் கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதிமுக மற்றும் பாமக கூட்டணி இறுதியானவுடன் தேமுதிகவைப் கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்ய ஆரம்பித்தது அதிமுக. கூட்டணியில் இணைவது மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து தேமுதிக பெரியளவில் நம்பிய பாஜகவும் அவர்களை டீலில் விட்டது. அதனால் திடமான ஆதரவு இல்லாமல் தேமுதிக தத்தளிக்க ஆரம்பித்தது. தொகுதிப் பங்கீட்டில் குறைவானத் தொகுதிகளே வழங்கப்படும் என அதிமுக சார்பில் பேச்சுவார்த்தையில் கூறப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த தேமுதிக கூட்டணியை உறுதி செய்யாமல் அமைதிக் காத்தது.

அதிருப்தியடைந்திருந்த தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க தூண்டிலைப் போட்டது திமுக கூட்டணி. இது தொடர்பாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு விஜயகாந்தின் உடல்நலம் விசாரித்தல் என்றுக் கூறப்பட்டாலும் அந்த சந்திப்புகளில் அரசியலும் பேசப்பட்டதாக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார். இதனால் தேமுதிக திடீரென டிமாண்ட் உருவானது. தமிழகம் முழுவதும் பரவலாக வாக்கு வங்கி வைத்திருக்கும் கட்சி என்பதால் மீண்டும் தேமுதிக வைக் கூட்டணிக்குள் சேர்ப்பதற்கு இரு கட்சிகளும் ஆர்வம் காட்ட ஆரம்பித்தன.

ஆனால் இதுவரையில் இருக் கட்சிகளுக்கும் எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறது தேமுதிக. விசாரித்தவரையில் நேற்றும் இன்றும் அஷ்டமி மற்றும் நவமி என்பதால் அதன் பிறகே கூட்டணிக் குறித்த முடிவுகளை தேமுதிக எடுக்க இருக்கிறதாம். அதனால் இன்று மாலையோ அல்லது நாளைக் காலையோ தேமுதிக வில் இருந்து கூட்டணித் தொடர்பான முக்கிய அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.