1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Dindugul srinivasan denied his statement on MGR

எம்.ஜி.ஆரை பற்றி நானா?... அப்படி பேசவே இல்லை - அமைச்சர் அந்தர் பல்டி

MGR
எம்.ஜி.ஆரை பற்றி நான் பேசியதை ஊடகங்கள் தவறாக சித்தரித்து விட்டனர் என அதிமுக அமைச்சர் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அடுத்த ஜனவரி வரை தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட உள்ளது. இதன் முதல் விழா மதுரையில் ஜூன் 30-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான கால்கோள் விழா கடந்த 21ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு நடந்தது. சட்டப்பேரவை நடந்து வருவதால் இரவோடு இரவாக அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 
 
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் நிருபர் ஒருவர் இந்த விழாவுக்கு வெளிமாநில முதல்வர்களை அழைப்பீர்களா என கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் தம்பி அவுங்கள்ள யாருக்கு எம்ஜிஆரை பற்றி தெரியும்? என்றார். 
 
திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பதிலை அருகில் நின்ற அமைச்சர்கள் கூட எதிர்பார்க்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் செங்கோட்டையன் சுதாரித்துக்கொண்டு சென்னையில் நடைபெறும் விழாவில் அவர்களை அழைப்போம் என்றார்.
 
இந்த விவகாரம் அதிமுக வட்டாரத்திலும், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மத்தியைலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் பி.எச்.பாண்டியன், எம்.ஜி.ஆரின் புகழுக்கு களங்கம் விளைவித்த சீனிவாசனின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். மேலும், பலரும் சீனிவாசனின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இதையடுத்து இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள திண்டுக்கல் சீனிவாசன் “எம்.ஜி.ஆரை பற்றி அறிந்தவர்களை அழைப்போம் என நான் கூறியதை ஊடகங்களும், பத்திரிக்கைகளும் மாற்றி செய்தி வெளியிட்டு விட்டன. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரையுமே பல வருடங்களாக எனது தலைவர்களாக கருதி வருகிறேன். உயிருக்கும் மேலாக அவர்களை நேசித்து வருகிறேன். எனவே, அவரை பற்றி நான் பேசியதாக வெளியான செய்தி பொய்யானது. அதை யாரும் நம்ப வேண்டாம்” என கூறியுள்ளார்.
 
ஆனாலும், அவரின் கருத்தால் எழுந்த நெருப்பில் இன்னும் புகைச்சல் இருந்து கொண்டே இருக்கிறது. 
About Writer
Murugan