1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 2 மே 2023 (22:04 IST)

தொடர் கனமழை - தண்ணீரில் மூழ்கிய மினி பஸ்!

கோவையில் கோடை வெயில் தாக்கம் என்பது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்று அதிகமாகவே  காணப்பட்டது.இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக கோவை மாவட்டத்தில் கோடை வெயிலை தணிக்க பரவலாக மழை பெய்து வருகிறது.நேற்றுமுன்தினம் கோவை, பெரியநாயக்கன்பாளையம்துடியலூர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.
 
இதனால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகள்,கடைகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதே போல் நேற்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மாநகரம் மற்றும் மாவட்ட பகுதியில் மழை பெய்தது. குறிப்பாக காந்திபுரம், உக்கடம் சிங்காநல்லூர் சூலூர் தொண்டாமுத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
 
அதேபோல் இன்று மாலையும் கருமேகங்கள் திரண்டு 2மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி வருகிறது.இதனால் தாழ்வான இடங்களிலும், ரயில்வே சுரங்கப்பாதையிலும், மேம்பாலத்தின் கீழ் பகுதியிலும் தண்ணீர் தேங்கி வருவதோடு கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி காணப்படுகிறது.இந்த கனமழையால் நல்லாம்பாளையம் முதல் கவுண்டம்பாளையம் செல்லும் ரயில்வே மேம்பால பகுதியில் தேங்கிய மழை நீரில் மினி பஸ் மூழ்கியது.மேலும் மாநகர முக்கியபகுதியில் உள்ள மேம்பால கீழ்பகுதியில் வாகன ஓட்டிகள் செல்ல போக்குவரத்து காவல்துறையினர் தடை விதித்து மாற்று வழியில் வாகனத்தை இயக்க அறிவுறுத்தி வருகின்றனர்.