வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 25 மே 2023 (12:47 IST)

மணமக்களை வாழ்த்த சிவபுராணம் மற்றும் திருக்குர்ஆன் ஓதிய மத குருமார்கள் - புதுமை திருமணம்!

சூலூரில் நடைபெற்ற காவல்துறை அதிகாரியின் இல்ல திருமண நிகழ்வில் மதகுருமார்கள் இணைந்து சிவபுராணம் மற்றும் திருக்குர்ஆன் ஓதி மணமக்களை வாழ்த்திய சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
 
தமிழக காவல்துறையில் கோவை மாவட்ட குற்ற ஆவண  காப்பக துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் வெற்றிச்செல்வன். முன்னதாக இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு எஸ்.ஐ.சி எனப்படும் மதம் சார்ந்த பிரச்சனைகளை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப்பி பிரிவில் பணியாற்றி வந்தார். காவல்துறையில் எஸ்.ஐ.சி அமைப்பில் கோவை மாவட்டத்தில் பணியாற்றி வந்த போது மதம் சார்ந்த பிரச்சனைகளை சிறப்பாக கையாண்டு பிரச்சனைகளை சுமூகமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
 
வெற்றிச்செல்வன். பல பிரச்சினைகளின் போது துரிதமாக செயல்பட்டு கலவரங்களை தடுத்தும் கட்டுப்படுத்தியும் உள்ளார். இதற்காக ஜனாதிபதி விருது மற்றும் அண்ணா விருதைப் பெற்றுள்ளார். இதனிடையே எம்மதமும் சம்மதம் என்ற எண்ணத்தில் மும்மத குருமார்கள் முன்னிலையில் தனது மகளின் திருமணத்தை நடத்தியுள்ளார் டிஎஸ்பி வெற்றிச்செல்வன்.
 
வெற்றிச்செல்வனின் மகள் நிஷாந்தினி. பி.எஸ்.டி படித்து வரும் இவருக்கு திருநெல்வேலியைச் சேர்ந்த சுதர்சன் என்பவருக்கும் கோவை சூலூர் பகுதியில் தனியார் அரங்கில் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. 
அப்போது மணமேடையில் மதகுருமார்கள் சிவபுராணம் மற்றும் திருக்குர்ஆன் ஓதி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த காட்சிகள் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
 
காவல்துறை அதிகாரி ஒருவர் மதங்களைக் கடந்து மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என்று முனைப்பு காட்டியிருப்பது, காவல்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக உள்ள நிலையில் இவரின் மத நல்லிணக்கத்திற்கு பொதுமக்கள் மற்றும் சக போலீசார்  வரவேற்பையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். மும்மதங்களை சேர்ந்த குருமார்களின் பெயர்களுடன் அச்சடிக்கப்பட்ட இவர்களது திருமண பத்திரிக்கை ஏற்கனவே  வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.