புதன், 18 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2024 (09:56 IST)

துரைமுருகன் ரஜினி காரசாரப் பேச்சு குறித்து முதல்வர் ஸ்டாலின் பதில்!

சமீபத்தில் நடந்த அமைச்சர் எ வ வேலு எழுதிய  ‘கலைஞர் எனும் தாய்’ நூல்  வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். அவரது பேச்சில், அமைச்சர் துரைமுருகன் குறித்து நக்கலாகப் பேசியது வைரல் ஆனது. அதில் “துரைமுருகன் எல்லாம் கலைஞர் கண்ணிலேயே விரல்விட்டு ஆட்டியவர். அவரை எல்லாம் இப்போது முதல்வர் ஸ்டாலின் சரியாக கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்” எனப் பேசினார். இந்த பேச்சைக் கேட்டு முதல்வர் ஸ்டாலின் சிரித்து ரசித்தார்.

அதற்கு பதிலடியாக அமைச்சர் துரைமுருகன் ”சினிமாவில் பல்லு போன நடிகர்கள் எல்லாம் இன்னும் நடிப்பதால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லை” என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சமூகவலைதளங்களில் சர்ச்சைகள் கிளம்பி விவாதங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் தன்னுடைய பேச்சுக்காக நடிகர் ரஜினிகாந்த் அமைச்சர் துரைமுருகனிடம் தொலைபேசி வாயிலாக வருத்தம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ” “துரைமுருகன் எனது நீண்டகால நண்பர். அவர் என்ன சொன்னாலும் அதனால் எனக்கு வருத்தமில்லை. அவருடனான நட்புத் தொடரும்” எனவும் சமாதானக் கொடியை தூக்கியுள்ளார். மேலும் இதுகுறித்துப் பேசியுள்ள துரைமுருகன் “நான் ரஜினி குறித்துப் பேசிய நகைச்சுவைதானே தவிர, பகைச்சுவை இல்லை. எங்கள் நட்பு தொடரும்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் வெளிநாடு செல்வதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஸ்டாலின் “அவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள். அவர்களே சொன்னது போல அவர்களின் பேச்சை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளுங்கள். பகைச்சுவையாக எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்று பதிலளித்துள்ளார். அப்போது அருகில் இருந்த துரைமுருகன் அதை ஆமோதித்து சிரித்து ரசித்தார்.