1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 23 மே 2021 (16:59 IST)

நாளை முதல் கடும் ஊரடங்கு; வெளியே வந்தால் கடும் நடவடிக்கை! – காவல் ஆணையர் அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த இரண்டு வாரமாக தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் இருந்து வந்தது. எனினும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் நாளை முதல் தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் இன்று மக்கள் பொருட்களை வாங்க கடை வீதிகளில் குவிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாளை முதல் எந்த தளர்வுமின்றி ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் அனைத்து பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா ஊரடங்கு பணிகளை கண்காணிக்க 20 ஆயிரம் போலீஸார் ஈடுபட உள்ளனர். ஊரடங்கை மீறி வெளியே வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் நாளை முதல் இணைப்பு சாலைகள், சிறிய சாலைகள், மேம்பாலங்கள் மூடப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.