செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 29 ஜூன் 2021 (11:09 IST)

நீட் ஆய்வு குழு அமைக்க அனுமதி கேட்டீங்களா? – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

நீட் பாதிப்பு ஆய்வு குழு அமைக்க உச்சநீதிமன்ற அனுமதி பெறப்பட்டதா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதை தேர்தல் வாக்குறுதியாக அளித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தனி ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. பலரும் இந்த ஆய்வு குழுவின் இ-மெயிலுக்கு நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் தங்கள் கருத்துகளை அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசு நீட் ஆய்வு குழு அமைத்ததற்கு எதிராக தமிழக பாஜக பொது செயலாளர் கரு.நாகராஜன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று விசாரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் “நீட் தேர்வு குறித்து ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கு எதிரான நிலைபாட்டை மாநில அரசு எடுக்க முடியாது. நீட் தேர்வு குறித்து ஆய்வு குழு அமைக்க உச்சநீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா?” என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து பதிலளிக்க தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.