1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 28 மார்ச் 2020 (17:02 IST)

அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு பாஸ்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதை அடுத்து மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதும் அந்த ஊரடங்கு உத்தரவு தற்போது நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவையும் மீறி சிலர் வெளியே செல்கின்றனர். அவர்களில் வீம்புக்காக வெளியே செல்பவர்களும் உண்டு
 
அதே நேரத்தில் அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்பவர்கள் உண்டு. ஆனால் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளாமல் போலீசார் அவர்களையும் அடித்து நொறுக்குவதாக குற்றச்சாட்டுகள் காவல்துறையின் மீது எழுந்துள்ளது. சமீபத்தில் டாக்டர் ஒருவரை கூட போலீசார் அடித்ததாக வெளிவந்த வீடியோ வைரல் ஆனது 
 
இந்த நிலையில் அத்தியாவசிய பணிகளுக்கு வெளியே செல்பவர்கள் சென்னை மாநகராட்சியிடம் பாஸ் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வணிகம், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்றும் பொதுப் பயன்பாடுகள், ஊடக சேவை, சுகாதார மருத்துவ சேவைகளில் ஈடுபடுபவர்களும் பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது 
 
இதன் மூலம் அத்தியாவசிய தேவைக்கு செல்பவர்கள் காவல்துறையினர் அச்சுறுத்தல் இல்லாமல் வெளியே செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது