விஜயின் பிரச்சாரத்திற்கு பிளான் போட்ட ஜான் ஆரோக்கியசாமிக்கு சம்மன்?!.. சிபிஐ அதிரடி...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி பிரச்சாரத்திற்காக கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இன்னும் சில மாதங்களில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்யவிருப்பதால் விசாரணையை அவர்கள் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். ஏற்கனவே கரூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் தவெகவில் முக்கிய பொறுப்பில் உள்ள புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோரை டெல்லிக்கு வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட அவர் கடந்த 13ஆம் தேதி டெல்லி சென்று விசாரணையில் கலந்து கொண்டார்.
தற்போது விஜயின் பிரச்சாரத் திட்டத்தை வடிவமைத்த தவெக நிர்வாகி ஜான் ஆரோக்யசாமிக்கும் சிபிஐ சம்மன் அனுப்ப திட்டமிட்டிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. கரூர் பிரச்சாரத் திட்டத்தை முழுவதுமாக வடிவமைத்தது இவர்தான் என்கிறார்கள். குறிப்பாக போலீசார் சொன்ன இடத்தில் வண்டியை நிறுத்தாமல் சிறிது தூரம் தள்ளி சென்று வண்டியை நிறுத்த சொல்லி டிரைவருக்கு உத்தரவிட்டது இவர்தான் என சொல்லப்படுகிறது.
விஜயின் பிரச்சார வாகனத்தை சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தப் போகிறார்கள் என ஜான் ஆரோக்யசாமிக்கு தெரியவந்ததால் பிரச்சார வாகனத்தை வேறு இடத்தில் நிறுத்தியதாக சொல்லப்பட்டது. எனவே அவரிடமும் விசாரணை செய்ய சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டிருக்கிறார்களாம். ஒருபக்கம் நாளை சிபிஐ விசாரணைக்காக விஜய் இன்று டெல்லி சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.