1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வியாழன், 30 ஏப்ரல் 2020 (18:32 IST)

ஒரே நேரத்தில் தமிழகத்தில் ஊரடங்கை தளர்த்த முடியாது .. மருத்துவர் குழு பேட்டி

தமிழகம் உள்பட நாடு முழுவதும் மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து 19 மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக ஆலோசனை செய்துள்ளார்.

இதில். சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலமாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பின், மருத்துவ குழு பேட்டியளித்தனர். அதில், ஒரே நேரத்தில் தமிழகத்தில் ஊரடங்கை தளர்த்த முடியாது எனவும்,  ஊரடங்கை படிப்படியாக விலக்கலாம் ; அப்படி விலக்கினாலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் டாக்டர். பிரதீபாகவுர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சில பகுதிகளில் ஊரடங்கை தளர்த்துவது பற்றி அரசு முடிவு செய்யும்; ஆனாலும், முழுவதுமாக ஊரடங்கை தளர்த்த முடியாது. தமிழகத்தில் தொடர்ந்து தீவிர கண்காணிப்புக்கு பிறகுதான்  அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று தமிழகத்தில், தமிழ்நாட்டில் மேலும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.