1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 25 ஜனவரி 2022 (15:37 IST)

மாணவியின் புகைப்படத்தை வெளியிட்டது ஏன்? – பாஜக விளக்கம்!

தஞ்சை மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட்டது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருகாட்டுப்பள்ளியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி லாவண்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலை விவகாரத்தில் மாணவியை விடுதியில் அதிக வேலை வாங்கியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் மதமாற்றம் செய்ய முயன்றதால் மாணவி இறந்ததாக அவரது பெற்றோர் கூறியுள்ள நிலையில் பாஜகவினர் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாணவியின் புகைப்படம் மற்றும் மருத்துவமனையில் இருந்த வீடியோவை பாஜக வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “மாணவிக்கு நீதி கிடைக்காது என தெரிந்ததால் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டோம். பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில்தான் புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது. மாணவிக்கு நிகழ்ந்தது வன்கொடுமை சம்பவம் இல்லை” என்று கூறியுள்ளார். எனினும் பாஜகவின் இந்த செயலை பலரும் கண்டித்து வருகின்றனர்.