வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2019 (12:28 IST)

ஒரு கலைஞன் பேசவே கூடாதா?? பாரதிராஜா ஆவேசம்

பிரதமருக்கு கடிதம் எழுதியதாக இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதும் தேச துரோக வழக்கு பாய்ந்த நிலையில், இயக்குனர் பாரதிராஜா “கலைஞன் பொதுவெளியில் பேசவே கூடாதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் ஆங்காங்கே மதத்தின் பெயரால், சிறுபான்மையினர் மற்றும் பட்டியலினத்தவர்கள் மீதும் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவம் நடந்துவருகிறது. குறிப்பாக இஸ்லாமியர்கள் மதத்தின் பெயரால் கொல்லப்படும் கொடூரமும் நடந்துவருகிறது. இதனிடையே இது போன்ற தாக்குதல்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், இதனை உடனே தடுக்கவேண்டும் எனவும் இயக்குனர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், அடூர் கோபாலகிருஷ்ணன், வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் கடந்த ஆகஸ்து மாதம் மோடிக்கு தனது கையொப்பங்களை இட்டு கடிதம் எழுதினர்.

இதனையடுத்து மோடிக்கு கடிதம் எழுதிய அந்த 49 பிரபலங்கள் மீதும், நாட்டின் நற்பெயரை கெடுத்தல் மற்றும் பிரிவினைவாத போக்குகளை ஆதரவளித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தேச துரோகம், மற்றும் உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் “பிரதமருக்கு கடிதம் எழுதினால் தேச துரோக வழக்கா?” என பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் முக ஸ்டாலின், முத்தரசன், வைகோ, உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், பொய் வழக்கு போட்டு மாற்றுக் கருத்துடையவர்களை மவுனமாக்க முயல்வது ஏற்கத்தக்கதல்ல, கலைஞர்கள் தங்கள் கருத்துகளை திரைப்படத்தை தவிர பொது வெளியில் பேசக்கூடாது என அச்சுறுத்துவது சரியா? என கேள்வி எழுப்பியுள்ளார்.