1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 டிசம்பர் 2019 (14:12 IST)

போராட்டம் நடத்திய மாணவர்களை கைது செய்தது போலீஸ்: அதிகரிக்கும் பதட்டம்!

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடி வரும் மாணவர்களை போலீஸார் விரட்டியடிப்பதும், கைது செய்வதுமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் பலர் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவர்களை தாக்கியதை கண்டித்தும் நாடு முழுவதும் மாணவ அமைப்புகள் பல போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள மெட்ராஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர்கள் கடற்கரை சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு சென்ற போலீஸார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியதால் மாணவர்கள், காவலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதேபோல பெங்களூரு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 5 மாணவர்களை கட்டாயப்படுத்தி காவல் வேனில் போலீஸார் ஏற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

திருவாரூர் மத்திய பல்கலைகழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை தொடர்ந்து பல்கலைகழகத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல கல்லூரிகளுக்கும், பல்கலைகழகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடரும் மாணவர்கள் போராட்டங்களால் நாட்டில் பதட்டநிலை ஏற்பட்டுள்ளதாக பேசிக்கொள்ளப்படுகிறது.