1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (09:57 IST)

மின்சாரம், பஸ் கட்டணம் உயர்த்தக் கூடாது - அரசுக்கு அன்புமணி கோரிக்கை

வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி மின்சாரம், பஸ் கட்டணம் உயர்த்தக் கூடாது என தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை. 

 
தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டதை குறித்து அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள முக்கிய விஷயங்கள் பின்வருமாறு... 
 
தமிழகத்தின் பொதுக்கடன் ரூ.5.70 லட்சம் கோடியாகவும், மின்வாரியம், போக்குவரத்து கழகங்கள் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் கடன் மட்டும் ரூ.2 லட்சம் கோடியாகவும் அதிகரித்து விட்டதாக அரசு தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நிதி அமைச்சர் கடன் சுமையில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பார் என்று நம்புவோம். பயனற்ற இலவசங்கள், மானியங்கள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். அரசின் உதவிகள் தேவையானோருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதுதான் பாமகவின் நிலை. 
 
அமைச்சரின் பேச்சை பார்க்கும்போது மின்கட்டணம், பஸ் கட்டணம், சொத்துவரி உள்ளிட்ட அனைத்தும் உயர்த்தப்படுமோ? என்ற பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த கட்டணங்கள் உயர்த்தப்படக் கூடாது. மக்கள் மீது சுமையை சுமத்துவதன் மூலம் கடனை சரி செய்ய நினைக்க கூடாது என தமிழக அரசுக்கான பாமகவின் ஆலோசனையாக தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.